இலங்கைக்கு உணவு, மருந்துகள் அனுப்புவதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், வெறும் அரசியல் லாபம் ஈட்டுவதற்கான செயலாகிவிடக் கூடாது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு, அந்த நாட்டுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, மருந்துகளை அனுப்புவதற்கு அனுமதிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மே தினம்: நினைவுச் சின்னத்துக்கு முதல்வர் மலரஞ்சலி
அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் அந்த நாட்டுக்கு உதவ தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழக பாஜக வரவேற்றது.
இந்த நிலையில், முதல்வருக்கு ஒரு திருக்குறளை நினைவுபடுத்த விரும்புகிறேன். தற்போதைய சூழலுக்கு உகந்தது இந்தக் குறள்.
'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லி வண்ணம செயல்'
தமிழ்நாடு அரசின் சமீபத்திய நடவடிக்கைகள், குறிப்பாக 'ஆப்ரேஷன் கங்கா'வில் அரசியல் லாபம் சம்பாதிப்பதே அதன் நோக்கமாக இருந்தது. இந்தத் தீர்மானமும் இதுபோன்ற ஒரு செயலாகிவிடக் கூடாது.
உதவிப் பொருள்களை நேரடியாகக் கொண்டு சேர்ப்பதாக வலியுறுத்தாமல் நிலையான நெறிமுறைகளை அரசியலுக்குள்ளாக்காது சுமுகமாக இலங்கை சென்றடைய தமிழ்நாடு அரசு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் பொருள்களை ஒப்படைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.