காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயில் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 13) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும்,108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும் திகழ்வது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தேவராஜ சுவாமி திருக்கோயில். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதா் பெருவிழா சிறப்புக்குரிய இந்தத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தத் திருவிழா நடைபெறவில்லை.
இந்த நிலையில், நிகழாண்டுக்கான வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை அதிகாலையில் (மே 13) கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் திருக்கோவிலில் உள்ள கொடிமரத்தில் கருடாழ்வார் சின்னம் பொறித்த கொடியை ஏற்றினார்கள். கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் திருக்கோவிலில் உள்ள கொடிமரத்தில் கருடாழ்வார் சின்னம் பொறித்த கொடியை ஏற்றினார்கள்.
இதனைத்தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியருடன் உற்சவர் வரதராஜ பெருமாள் தங்க சப்பரத்தில் வீதி உலா வந்தார்.
கொடியேற்ற விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் ஆ. முத்து ரத்தினவேலு, திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் ந.தியாகராஜன் மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்..சுதாகர் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி வினோத் சாந்தாராம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
வருகிற 15 -ஆம் தேதி கருட சேவை காட்சியும், 19- ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
வருகிற 21- ஆம் தேதி அத்திவரதா் எழுந்தருளப்பட்டுள்ள திருக்கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் தீா்த்தவாரியும், 22- ஆம் தேதி இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
இதையும் படிக்க | போக்குவரத்து ஊழியா்களுக்கு 5% ஊதிய உயா்வு