/

மண்சரிவு: ஏற்காடு மலைப்பாதையில் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் - ஆட்சியர்

ஏற்காடு மலைப்பாதையில் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாலத்துக்கும் 40 அடி பாலத்துக்கும் இடையே மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடும் ஆட்சியர் செ. கார்மேகம்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:16 am

DIN

சேலம்:  ஏற்காடு மலைப்பாதையில் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை மாலை 2 மணி நேரம் தொடா்ந்து பெய்த பலத்த மழை காரணமாக ஏற்காடு செல்லும் மலைப் பாதையின் 60 அடி பாலத்துக்கும் 40 அடி பாலத்துக்கும் இடையே திடீரென லேசான மண் சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவு 3-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்டதால்  வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது .

இதுபற்றி தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் மலைப் பாதையில் சரிந்து விழுந்த மண் மற்றும் கற்களை அகற்ற உத்தரவிட்டார். 

Story image

ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட வரும் ஆட்சியர் செ. கார்மேகம்.

இதையடுத்து தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினா், பொதுப்பணித்துறையினர் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்து மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் இயந்திரம் வரவழைத்து சரிந்து விழுந்த மண் முழுவதும் அகற்றப்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் போக்குவரத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம்  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

பிறகு அவர் செய்தியாளர்களிடம்  கூறுகையில், ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு  அகற்றப்பட்டு சரி செய்யப்பட்டுவிட்டது. அதனால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வழக்கம்போல போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும், இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். 

Story image

ஏற்காடு படகு இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்யும் ஆட்சியர் செ. கார்மேகம்.

மேலும் இரவு நேரங்களில் மழை பெய்கின்ற பொழுது வாகனத்தில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக வாகனத்தை இயக்க வேண்டும். 
திட்டமிட்டபடி வரும் மே 26 -ஆம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும்.

ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் நெகிழி பயன்பாட்டை தவிர்த்து தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆட்சியர் செ.கார்மேகம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.