தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயரை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் வெவ்வேறு நாள்களில் நிறைவடைகிறது.
இதையடுத்து 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்றும், ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும், தோ்தலுக்கான அறிவிக்கை மே 24-ஆம் தேதி வெளியிடப்பட்டு, வழக்கம்போல், வாக்குப்பதிவு முடிந்த ஒரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சித் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 ஜூன் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், இரா. கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களான டி.கே.எஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.