நெல்லை மானூர் அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடினார்.
நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த தெற்கு வாகைக்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(40). இவரது மனைவி ராமலட்சுமி (35). இத்தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
திருப்பூரில் கார் மெக்கானிக்காக வேலை பார்க்கும் கல்யாண சுந்தரம் அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் அவர் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்பிய நிலையில், இன்று ராமலட்சுமி அவரது வீட்டில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் மானூர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்ததன்பேரில், அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கல்யாணசுந்தரம்தான் குடும்பத் தகராறில் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதாவது கணவன்- மனைவி இடையே பல மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். திருப்பூரில் வைத்தும் இருவரும் சண்டை போட்டுள்ளனர்.
இதையடுத்து கல்யாண சுந்தரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊரான மானூர் வந்துள்ளார். இங்கு வந்த இடத்திலும் இன்று மீண்டும் சண்டை போட்டுள்ளனர்
அப்போது ஆத்திரத்தில் கல்யாணசுந்தரம் வீட்டில் இருந்த அரிவளால் ராமலட்சுமியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து தலைமறைவான கல்யாணசுந்தரத்தை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.