சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வந்தது.
நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நின்று இன்று வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதையும் படிக்க.. பாகிஸ்தானில் அச்சு அசல் ரஜினிகாந்த் போல ஒருவர்.. அவருக்கு ஒரு ஆசை!
இந்த நிலையில், தமிழக மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, சென்னையில் நேற்று இரவு முதல் எங்கும் மழை பெய்யவில்லை. இதுவே அடுத்த சில மணி நேரங்களுக்கும் நீடிக்கும். பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும். எனவே விடுமுறை அறிவிப்புகள் இருக்காது.
சென்னையிலிருந்து கனமழை, கடலூர் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டது. இது பிறகு டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளுக்கு இடம்பெயரவிருக்கிறது. இதனால், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்கள் நல்ல மழையைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
அடுத்த இரண்டு நாள்களுக்கு மழையானது, தமிழகத்தின் உள் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் பெய்யும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மழை பெய்யலாம். ஆனால் கனமழையாகவோ பலத்த மழையாகவோ இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
தமிழகத்தில் வியாழக்கிழமை 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வியாழக்கிழமை விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகா், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்
வெள்ளிக்கிழமை கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், விழுப்புரம், அரியலூா், பெரம்பலூா், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.