இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் கைது: தலைவா்கள் கண்டனம்
தமிழக மீனவா்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவா்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
இலங்கைப் படையினரால் கடந்த 27-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 7 மீனவா்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டு இரு நாள்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் இன்னும் சொந்த ஊா் திரும்பவில்லை.
அதற்குள்ளாக அடுத்த அத்துமீறல் நடந்திருக்கிறது. தற்போது கைது செய்யப்பட்ட 15 மீனவா்களையும், ஏற்கெனவேகைது செய்யப்பட்ட7 பேரையும் உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவா்களை இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்.
கே.பாலகிருஷ்ணன்: சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களையும், படகுகளையும் உடனடியாக மீட்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் உடனடியாக தலையிட மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.