காரைக்கால்: சந்திர கிரகணத்தையொட்டி கோயில்கள் பல நடை சாத்தப்பட்ட நிலையிலும், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை வழக்கமான வழிபாடு தொடர்ந்து நடைபெற்றது.
கிரகணம் ஏற்படும் நாளில் பல்வேறு கோயில்களில் நடை சாத்தப்படுவது வழக்கமாக உள்ளது. புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடை சாத்தப்படும் வழக்கம் இல்லை என்பதால் சந்திர கிரகண நாளான செவ்வாய்க்கிழமை வழக்கமான வழிபாடுகள் நடைபெற்றன.
கிரகணம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 வரை வரை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் வழக்கம்போல காலை 6 முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருநள்ளாறு கோயில் வரலாற்றில் எந்தவொரு கிரகணத்தின் நாள், நேரத்தின்போது நடை சாத்தப்படுவது வழக்கமில்லை. கிரகணம் நிறைவடைந்த பின்னர் கிரகண புண்ணிய காலம் வழக்கமான 6 கால பூஜை அல்லாமல் கூடுதலாக செய்யப்படுகிறது என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கிரகண நாளில் திருநள்ளாறு கோயில் மூடப்படுவது இல்லை என்ற தகவல் அறிந்த வெளியூரைச் சேர்ந்தோரும், காரைக்கால் பகுதியினரும் வழக்கமான வழிபாட்டில் ஈடுபட்டனர்.