சென்னையில் கனமழை பெய்து வருவதால் மழைநீர் தேங்கியுள்ளதால் 2 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னையில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் வியாழக்கிழமை இரவு முதல் விடிய விடிய பெய்த மழை வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்நிலையில், மழைநீர் தேங்கியுள்ளதால் சூரப்பட்டு விநாயகபுரம் மற்றும் ரங்கராஜபுரம் ஆகிய 2 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இதனிடையே சென்னை வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நலன் கருதி ரயில்வே நிர்வாகம் போக்குவரத்தை துண்டித்து சுரங்கப்பாதை முகப்பில் தடுப்புகள் அமைத்துள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு:
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு உள்ளிட்ட புகார்களுக்கு 1913 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கலாம் என்றும், மேலும், 044- 25619206, 044- 25619207, 044- 25619208 என்ற உதவி எண்கள் மூலமாக பொதுமக்கள் சென்னை மாநகராட்சியை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. .
மேலும், நம்ம சென்னை செயல், சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் கணக்கு வழியாகவும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.