காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கிவருவதால், வடதமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் சென்னையை நெருங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கக்கடலில் தெற்கே உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கு 350 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
தெற்கு ஆந்திரா வடக்கு தமிழ்நாடு இடையே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும். இதனால், இன்று நள்ளிரவு வரை காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துகொண்டே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை பொருத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 30டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.