சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நிகழாண்டில் புதிய கட்டண முறை அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், 1,610 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோன்று, 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,960 பி.டி.எஸ். இடங்களில் 1,254 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ளவை நிர்வாக ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ரூ.4 லட்சத்தில் இருந்து 4.50 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.12.50 லட்சத்தில் இருந்து ரூ.13.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கட்டணத்தைப் பொருத்தவரை ரூ.23.50 லட்சத்தில் இருந்து ரூ.24.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: எதிர்க்கட்சி துணைத் தலைவராக நீடிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?
மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டணம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.5.40 லட்சமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.16.20 லட்சமாகவும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ரூ.29.40 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, பல் மருத்துவப் படிப்புக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.