சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் (புதிய தலைமுறை) பணிபுரியும் தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (24) சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில், காசி தியேட்டர் அருகே உள்ள பிள்ளையார் கோயில் முன்பு மழைநீர் வடிகால் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட கட்டுமான பள்ளத்தில் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.
இரவு ஒரு மணி அளவில் அந்த வழியே சென்ற காவலர் ஒருவர் அவருக்கு உதவி செய்து தரமணி அருகே உள்ள கந்தன் சாவடியில் உள்ள அவரது இல்லத்திற்கு ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் இருந்த நண்பர்கள் அவரை முதலுதவிக்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சுய நினைவை இழந்த முத்துக்கிருஷ்ணனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நேரில் வந்து மருத்துவர்களை சந்தித்து அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை நடந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஏற்கனவே, சென்னை கொளத்தூர் ரெட்டேரி சாலையில் சுகி ஓட்டுநர் பள்ளத்தில் விழுந்து காயத்துடன் உயிர்தப்பிய நிலையில், அயனாவரம் ஐ.சி.எப் அருகே மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மின்சாரம் தாக்கி இரு தொழிலாளிகள் உயிரிழந்த நிலையில், தற்போது மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் மழை நீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருக்கிறது.