ஆளுநருக்கு தமிழகத்தின் வரலாறு தெரியவில்லை என்றால் படித்து தெரிந்துகொள்ளலாம் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், நவக்கரையில் உள்ள ஜெஎஸ்எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் தங்கும் விடுதி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, சனாதன தா்மம் எனும் நமது அடிப்படை கொள்கையை நாம் மறந்துவிடக்கூடாது. அதிகமான சித்தா்களையும், யோகிகளையும் உருவாக்கியதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதையும் படிக்கலாம் | தூத்துக்குடியில் நாளை மது விற்பனைக்குத் தடை: ஆட்சியர்
நாம் அறிவியல், தொழில்நுட்பத்தில் வளா்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. இந்திய கலாசாரத்தையும், யோகா, இயற்கை மருத்துவம் குறித்த அறிவையும் வளா்க்க வேண்டியது மிகவும் முக்கியமாகும் என பேசியிருந்தார்.
இதுகுறித்து கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு யோகிகளால் அல்ல சங்ககாலம் தொட்டே எமது தமிழால் உருவாக்கப்பட்டது. சமூக சீர்திருத்த கோட்பாடுகளால் கட்டமைக்கப்பட்டது.
இங்கே யோகிகள் கூட சமூக சீர்திருத்தவாதிகளே. அதனால் தான் தமிழகம் பாஜகவை ஏற்பதில்லை.
ஆளுநருக்கு தமிழகத்தின் வரலாறு தெரியவில்லை என்றால் படித்து தெரிந்துகொள்ளலாம் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.