ஒரத்தநாடு அருகே பக்தர்களிடம் தங்கப் புதையல் எடுத்துத் தருவதாக பல லட்சம் மோசடி செய்த பூசாரி. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மதுக்கூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் பூசாரியாக இருந்து வந்தார். இவர் இந்த கோவில் வளாகத்திலேயே தங்கி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வந்துள்ளார். இந்நிலையில் அங்கு சாமிதரிசனம் செய்ய வந்த பெண்களிடம் தங்கப்புதையல், இருக்கும் அந்த இடத்திலேயே தோண்டி எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதனடிப்படையில் சென்னையை சேர்ந்த தேவி என்ற பெண்ணிடம் பூசாரி ரமேஷ்குமார் தங்க புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ. 23 லட்சம் ரூபாயை வாங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் பாப்பாநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணிடமூம் புதையல் எடுத்து தருவதாக கூறிய ஐந்து லட்ச ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால் பல மாதங்களாக ஆகியும் தங்கப் புதையல் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தால் தேவி ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் கோவில் வந்து அது கோவில் வளாகத்தில் அமர்ந்து இருபத்தி மூன்று லட்சம் ரூபாய் பணத்தை தருமாறு பூசாரி ரமேஷ் குமாரிடம் தகராறு செய்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த பல பெண்கள் பல ஊர்களில் இருந்து வர தொடங்கியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தேவி ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது குறித்து ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.