பணம் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமீன் நிபந்தனையில் உச்சநீதிமன்றம் தளர்வு அளித்துள்ளது.
ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த புகாரில் கைதான ராஜேந்திரபாலாஜி ஜாமீனில் வெளியே இருக்கிறார். இந்த நிலையில் பண மோசடி வழக்கில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடங்களுக்கும் செல்லலாம் என அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் நிபந்தனையை தளர்த்தியது. அதேசமயம், விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க- விரைவில் தில்லி செல்லும் லாலு, நிதிஷ்!
பாஸ்போர்ட்டை புதுப்பித்துக்கொள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், வெளிமாநிலங்களுக்கு பயணிக்கும் வகையில் நிபந்தனை தளர்வு தேவை என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இதையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து விசாரணையை மேலும் 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.