செம்பரம்பாக்கம் ஏரியில் சுயபடம் எடுக்கும் போது நீரில் மூழ்கி இருவர் பலி
செம்பரம்பாக்கம் ஏரியில் சுயபடம் எடுக்கும் போது நீரில் மூழ்கி இருவர் பலியாகினர்.
குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் விக்னேஷ்(20). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் தரப்பாக்கத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட்ஸ் (16), 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து மதகின் அருகே இறங்கி நின்று தங்களது செல்போனில் சுயபடம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் விழுந்து முழ்கினார்கள். இதனை கண்டதும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்க முயன்றனர்.
இருவரையும் மீட்க முடியாததால் தீயணைப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய இருவரின் உடலையும் நீண்ட நேரத்திற்கு பின் நீரில் மூழ்கிய இருவரின் உடலையும் இறந்த நிலையில் மீட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் காவல் துறையினர் இறந்து போன இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்கும் போதும், சுயபடம் எடுக்கும் போதும் விழுந்து இறந்து போகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி மாணவன் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.