அதிமுக அலுவலக கலவரத்தின்போது திருடப்பட்ட அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டு அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கனோர் சென்றனர்.
அப்போது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில், பலருக்கு காயங்கள் ஏற்பட்டது. மேலும், அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை திருடிச்சென்றதாகவும் புகார் எழுந்தது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரத்தின்போது எடுத்துச் செல்லப்பட்ட 113 ஆவணங்களும் மீட்கப்பட்டு அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆவணங்கள், பரிசுப்பெருள்களை திருடிச்சென்றுவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் ஓபிஎஸ் உள்ளிட்ட 60 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.