முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

ஜெயக்குமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி கடந்த 2014-ஆம் ஆண்டு எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, எனது தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்தார். மேலும் தொழிற்சாலை பூட்டி, அபகரித்துக் கொண்டார். நான் பல முறை எனது தொழிற்சாலையை திறக்க முயன்றும் ஜெயக்குமார், நவீன், அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா தரப்பு எனக்கு அச்சுறுத்தல் கொடுத்தும், தகராறு செய்தும் வருகின்றனர் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து ஒரு புகார் அளித்தார். 

அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மத்தியக் குற்றப்பிரிவுக்கு சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதற்கிடையே இந்த புகார் மனு குறித்து காவல்துறை விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவீன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் புகார் குறித்து விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது. 

இதையடுத்து மகேஷ் அளித்த புகார் மனு குறித்து மத்தியக் குற்றப்பிரிவினர் விசாரணை செய்தனர். விசாரணையில் ஜெயக்குமார் தரப்பு மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மத்தியக் குற்றப் பிரிவினர் ஜெயக்குமார்,ஜெயப்பிரியா, நவீன் ஆகிய 3 பேர் மீது கொலை மிரட்டல்,அத்துமீறி நுழைதல், குற்றம் செய்ய தூண்டுதல், குற்றச் சதி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவு செய்தனர். 

இந்நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவருடைய மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமாரும் மனு தாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல்  தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில், நீதிபதி இளந்திரையன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவருடைய மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com