தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 500 அபராதம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,
கரோனா அதிகரிப்பைக் கண்டு மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. மக்கள் பதட்டமடையத் தேவையில்லை என்று மத்திய அரசே கூறியுள்ளது.
கரோனா தொற்றைத் தவிர்க்க பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்றைக் குறைக்க சமூக இடைவெளியையும் மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
தடுப்பூசி தொய்வையும் சரிசெய்யும் பொருட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.
தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சென்னை ஐஐடியில் தொற்று உறுதியானவர்களின் நிலைமை சீராக உள்ளது என்றார்.
பின்னர் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வரும் நாளில் தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றார்.