விழுப்புரத்தில் சனிக்கிழமை நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.
உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி விழுப்புரம் நகராட்சி பூங்காவில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சி மற்றும் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. இதில் லப்ர்டோர், போம்மேரனியன், ஜெர்மன் ஷெபர்ட், சிப்பி பாறை உள்பட 10 பிரிவுகளில் சிறந்த 10 நாய்கள் தேர்வு செய்யப்பட்டு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த கண்காட்சியில் விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் நாய்களும் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தின. இந்த முகாமில் நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மேலும் நாய்களுக்கான பராமரிப்பு முறைகள், ஊட்டச்சத்து, நோய்த் தடுப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.
விழாவில் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் கலந்துகொண்டு, நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். முகாமில் கலந்துகொண்டு நாய்களுக்கு உணவுப் பொருள்கள், மருத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்த நாய் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பார்வையிட்டு ரசித்தனர். கண்காட்சிக்கு நாய்களை அழைத்து வந்த உரிமையாளர்கள் அந்த நாய்களை தங்களின் குழந்தைகளைப் போல கொஞ்சி மகிழ்ந்தது காண்போரை வெகுவாக கவர்ந்தது.