ரூ.30 கோடி நிலமோசடி வழக்கு: மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட 5 பேர் கைது

காஞ்சிபுரம் அருகே ரூ.30 கோடி மதிப்பிலான நிலமோசடி வழக்கில் மாவட்ட வருவாய் அலுவலர், இரு வட்டாட்சியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.30 கோடி நிலமோசடி வழக்கு: மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட 5 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ரூ.30 கோடி மதிப்பிலான நிலமோசடி வழக்கில் மாவட்ட வருவாய் அலுவலர், இரு வட்டாட்சியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட வடகால் மற்றும் பால்நல்லூர் கிராமங்களில் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான நிலத்தை ரத்து செய்து மோசடி செய்த வழக்கில் சிபிசிஐடி காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர், இரு வட்டாட்சியர்கள் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட வடகால் மற்றும் பால்நல்லூர் கிராமங்களில் தனியார் நிறுவனம் ஒன்று வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனைப் பிரிவுகள் அமைத்தது. அப்போது 16.64 ஏக்கர் நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து பொதுப்பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் அந்த நிலங்களை அமலதாஸ் ராஜேஷ் என்பவர் மோசடி செய்து விற்பனை செய்ததாக தெரியவந்தது. மோசடி செய்த நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடியாகும் எனத் தெரிய வருகிறது.

இது குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணையும் நடத்தி வந்தனர். பொது உபயோகத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தினை ரத்து செய்து, அதற்கு உடந்தையாக செயல்பட்டதாக மாவட்ட வருவாய் அலுவலரான தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி வரும் ராஜேந்திரன்(54), காஞ்சிபுரத்தில் நில எடுப்பு வட்டாட்சியராக பணியாற்றி வரும் வட்டாட்சியர் எழில்வளவன்(50), ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியரான பி.பார்த்தசாரதி(33) காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைப்பதிவாளராக பணிபுரிந்து வரும் ராஜதுரை(41) மற்றும் உதவியாளரான பெனடின்(54) ஆகிய 5 பேர் மீதும் சிபிசிஐடி காவல் துறையினர் 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பதுடன் கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த 1991 ஆம் ஆண்டு அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தின் பதிவுகளை ரத்து, செய்து மோசடியில் ஈடுபட்ட மாவட்ட வருவாய் அலுவலர், இரு வட்டாட்சியர்கள், இணைப்பதிவாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com