தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை காலை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பல இடங்களில் இலேசான மழை பெய்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு மருவமழை காலத்தில் தமிழ்நாடு பகுதியின் மேல் தொடர்ந்து வீசக்கூடிய மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில், அதாவது டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த வரக்கூடிய 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், திருவாரூ, தஞ்சாவூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.