
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்த மழையால் நீர்மட்டம் உயர்ந்தும், மின்சார உற்பத்தியும் அதிகரித்து வந்தது. கடந்த ஜூலை 4 முதல் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில், 168 மெகாவாட் மின்சாரம் என முழு கொள்ளளவு உற்பத்தி நடைபெற்றது.
இந்நிலையில் ரூல் கர்வ் நடைமுறை, மழை குறைவு போன்ற காரணங்களால் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. ஆக.20 வரை அதிக அளவில் தண்ணீர், அதாவது விநாடிக்கு,1866 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது, ஆக.21 ல், விநாடிக்கு, 955 அடியாக திறந்து விடப்பட்டது. அதனால் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில், 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி குறைவாக நடைபெற்றது.
தற்போது சனிக்கிழமை முதல் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு, 1866 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது, அதனால் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மீண்டும் முழு கொள்ளளவான , 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி சனிக்கிழமை முதல் தொடங்கியது.
அணை நிலவரம்
முல்லைப் பெரியாறு அணையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 136.20 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு, 6168 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு, 1,508 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,866 கன அடியாகவும் இருந்தது.