சீர்காழி அருகே வானகிரியில் கடல் சீற்றம் காரணமாக 20 லட்சம் மதிப்பிலான விசைப்படகு மூழ்கியுள்ளது. படகிலிருந்த நான்கு மீனவர்கள் பாதுகாப்பாகக் கரை சேர்ந்த நிலையில் படகை மீட்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு சொந்தமான விசைப் படகில் பாஸ்கர், இளையராஜா, பிரபு, மாணிக்கம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் இன்று அதிகாலை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
பூம்புகார் துறைமுகத்திற்கு கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகு தத்தளித்து. இதனால் நிலை தடுமாறிய விசைப் படகு கடலில் மூழ்கியது. இதனையடுத்து படகிலிருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்துத் தத்தளித்தனர்.
இதனைக் கண்ட சக மீனவர்கள் அவர்களை மீட்டுப் பாதுகாப்பாகக் கரை சேர்த்தனர். மீனவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வானகிரி மீனவர்கள் மாற்றுப் படகுகள் மூலம் சென்று கடலில் மூழ்கிய 20 லட்சம் மதிப்பிலான விசைப் படகை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.