உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தது இதுவே தாமதம் என்றும் அவர் துணை முதல்வராக எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது குறித்துப் பேசினார்.
அப்போது, 'முதல்வர் ஸ்டாலின் இதுவே உதயநிதிக்கு அமைச்சர் பதவியை மிகவும் தாமதமாகக் கொடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவரை முதலிலேயே அமைச்சராக்கியிருக்க வேண்டும். கடந்த தேர்தலிலேயே தெரியும், உதயநிதி திறமை பெற்ற இளைஞர். அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். சட்டப்பேரவை உறுப்பினராக அவர் சில காலம் பயிற்சி பெறட்டும் என்றே முதல்வர் காத்திருந்தார் என்று தோன்றுகிறது. அவருக்கு எந்தத் துறை கொடுப்பது என்பது குறித்து முதல்வர் நாளை அறிவிப்பார்.
உதயநிதி மேலும் பல பொறுப்புகளையும் பெறுவார். அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாம் என்று இங்கு யாரும் சொல்லவில்லை. அவருக்கு தாமதாக கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் பலரும் சொல்கின்றனர்.
வாரிசு அரசியலே இருக்கக்கூடாது என்று ஏதேனும் இருக்கிறதா? வாரிசு அரசியல் வழக்கமானதுதான். மக்களுக்கு இதெல்லாம் தெரியும். அரசியலில் 10% பேர் வாரிசுகள்தான். வாரிசு அரசியல், அனைத்து இடத்திலும் அனைத்துக் கட்சியிலும் இருப்பதுதான். அது ஒன்றும் தவறில்லை. உதயநிதி துணை முதல்வராக விரைவில் எதிர்பார்க்கிறோம்' என்றார்.