சீர்காழியில் அதிமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் நகர கவுன்சிலரும் முன்னாள் பனைவெல்ல கூட்டுறவு சங்க இயக்குனருமான அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகுவதாக எம்ஜிஆர் சிலையிடம் கடிதம் கொடுத்து கண்ணீர் மல்க வெளியேறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் வசிப்பவர் சேகர் 70. இவர் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து உறுப்பினராக இருந்து பின்பு சீர்காழி நகர மன்ற உறுப்பினராக மூன்று முறையும், அதிமுக மாவட்ட பிரதிநிதியாகவும், பனை வெல்ல கூட்டுறவு சங்க இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
அதிமுக அறிவித்த போராட்டங்களில் பலமுறை கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். அதிமுக அறிவித்த மாநாடு, பொதுக்கூட்டம், கட்சிப் பணிகளிலும் இரவு பகல் பாராமல் பல ஆண்டு உழைத்துள்ளார். தற்போது இவரை கட்சி நிர்வாகிகள் மதிப்பது இல்லை என்றும், நடந்து முடிந்த நகர மன்றத் தேர்தலில் சரிவர உறுப்பினர்கள் தேர்வு செய்யாததால் அதிக அளவில் அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற இயலவில்லை. நான்காவது வார்டு சுமார் 20 வருடமாக அதிமுக கோட்டையாக இருந்துள்ளது. வேட்பாளர் தேர்வு சரியாக செய்யாததால் அதிமுக வெற்றி பெறவில்லை.
கட்சியின் ஒற்றுமை சீர்குலைந்து வருகிறது. கட்சிக்குள் நான்கு குழுக்களாக செயல்படுவதால் முன்னணி நிர்வாகிகளிடம் கலந்து யோசிக்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கு பொறுப்பு கொடுத்து செயல்படுவதால் என்னை போன்ற உறுப்பினர்களை உதாசனப்படுத்தி அவமானப்படுத்துகிறார்கள். சிலர் பதவிக்கு வந்தவுடன் தொண்டர்களை மறந்து விடுகின்றன எனவே எனது உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக முடிவு எடுக்கிறேன் என எம்.ஜி.ஆர் சிலையிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நடிகர் அசோக் செல்வன் ‘நாய்’ என குறிப்பிட்டது இந்த விமர்சகரையா?
எம்ஜிஆர் சிலையிடம் மனு கொடுத்து வந்த சேகர் கண்ணீர் மல்க கூறுகையில், எம்ஜிஆர் ரசிகன் நான்; எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் பயணித்து வருகிறேன். கட்சியை விட்டு விலக மணமில்லாமல் விலகுவதாகவும், எனது விலகல் கடிதத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோரிடம் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.