சென்னை: தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, சென்னையிலிருந்து சுமார் 500 பேருந்துகள் இயக்கப்படவிருக்கிறது.
ஏற்கனவே நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போதும், மக்களின் வசதிக்காக, சிறப்புப் பேருந்துகள் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டன.
தற்போது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புறங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதால், குறிப்பிட்ட ஊர்களுக்கு மட்டும் கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க.. சிறுத்தைக்கு நேர்ந்த சோகம்: 2 நாள்கள், 30 பேர், இறுதியில் வெற்றி
அதன்படி, தேர்தலுக்கு முந்தைய நாளான பிப்ரவரி 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை, கூடுதலாக சென்னையிலிருந்து 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
திருச்சி, கும்பகோணம், மதுரை போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, அவை சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்பட உள்ளன.
தற்போது, குறைந்த அளவிலான மக்களே, பேருந்துகளில் பயணிக்க அன்றைய தினம் முன்பதிவு செய்திருப்பதாலும், வார இறுதி நாள் என்பதால் மக்களின் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், குறைந்த அளவிலான சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.