ஈரோடு: ஈரோடு மாநகராட்சி 48-வது வார்டில் சலூன் கடை நடத்தி வரும் சிவஞானம் மார்க்சிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஈரோடு மாநகராட்சி 48-வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ச. சிவஞானம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் அணைக்கட்டு பகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் சலூன் கடை நடத்தி வருகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1999-ம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ள சிவஞானம், மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் ஏற்கனவே இந்த வார்டில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது திமுக கூட்டணியில் சிவஞானத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சலூன் கடை நடத்தி வருவதால், பெரும்பான்மையானவர்களுக்கு அறிமுகமான வேட்பாளராக சிவஞானம் விளங்கினார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பும், பகல் நேரங்களில் சலூன் கடையில் முடிதிருத்தம் செய்யும் பணியை செய்து கொண்டே பிரசாரத்தில் ஈடுபட்ட சிவஞானம் தேர்தலில் வெற்றி பெற்று 48-வது வார்டு மாமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற வேட்பாளர் சிவஞானம் கூறும்போது, ‘ சலூன் கடை நடத்தி வந்ததால், இந்த வார்டு மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இப்பகுதி மக்களின் கோரிக்களை நிறைவேற்ற எங்களது கட்சி சார்பில், தொடர்ந்து போராடினேன். அதனை அங்கீகரித்து இந்த வெற்றியை எனக்கு வாக்காளர்கள் வழக்கியுள்ளனர்.
அணைக்கட்டு பகுதியில் குடியிருப்போருக்கு பட்டா பெற்றுத் தருவேன். சாலைவசதி, விதவை, முதியோருக்கு உதவித்தொகை பெற்றுத் தருவேன் என்றார்.