சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் வாட்ஸ்ஆப் விடியோ அழைப்பு மூலம் உரையாடினார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று 3-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. ரஷிய தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. உதவி கேட்டும் உக்ரைனுடன் போரிட உலக நாடுகள் முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷியத் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் உக்ரைனில் கல்வி மற்றும் வேலைக்காகச் சென்ற பிற நாட்டினரும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மத்திய அரசு சார்பிலும் தில்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், பணியாளர்களும் அங்கு சிக்கியுள்ளனர். அவர்கள் தொடர்புகொள்ள 044-28515288, 9600023645, 994025644 ஆகிய எண்கள் வழங்ப்பட்டுள்ளன. மேலும் www.nrtamil.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உதவிகள் கோரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இன்று சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் உரையாடினார். உக்ரைனில் உள்ள 3 மாணவர்களுடன் வாட்ஸ்ஆப் விடியோ அழைப்பு மூலம் உரையாடிய முதல்வர், அவர்களில் நிலையைக் கேட்டறிந்து தைரியமாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
முன்னதாக, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள், பணியாளர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | உக்ரைனில் போர்: தமிழர்கள் உதவிக்கு தொடர்புகொள்ளலாம் - தமிழக அரசு