ஜெயலலிதா நினைவு இல்ல மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றியதை ரத்து செய்த தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து, அதிமுக தொடுத்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றியதை ரத்து செய்த தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து, அதிமுக தொடுத்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றி அதிமுக ஆட்சியில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. 

இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோா் தொடுத்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி, அந்த அரசாணைகளை ரத்து செய்து கடந்த மாதம் தீா்ப்பளித்தாா்.

இதனை எதிர்த்து அதிமுக தரப்பிலும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதிமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்றம் நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமாா் சுகுமார குருப் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை செய்தனர்.

அதிமுக மற்றும் தீபா தரப்பு வாதங்களை கடந்த திங்கள்கிழமை கேட்ட நிலையில், இன்று காலை தீர்பை வாசித்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் பேசியதாவது:

ஜெயலலிதா இல்லம் பொதுநோக்கம் இன்றி அரசியல் காரணங்களுக்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நினைவிடம் இருக்கும் நிலையில், இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது.

மேலும், தனி நீதிபதியின் தீர்ப்பு செல்லும் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com