வருகிற ஜனவரி 12 ஆம் தேதி மதுரை பொங்கல் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருந்த நிலையில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12 ஆம் தேதி பாஜக சார்பில் மதுரையில் 'மோடி பொங்கல்' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
தமிழகம் வரவிருந்த பிரதமர் மோடி, புதுச்சேரி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள இருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மதுரையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரோனா, ஒமைக்ரான் அதிகரிப்பு காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக விளக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் அரசியலைத் தாண்டி மிக முக்கியமானவர்; ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவர் முக்கிய காரணம்; மாநில அரசு விதிமுறைகளை வகுத்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.