47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீட்: அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து பாஜக வெளிநடப்பு

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து பாஜக வெளிநடப்புச் செய்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜனவரி 2022, 6:53 am

DIN


நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து பாஜக வெளிநடப்புச் செய்துள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக, பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திலிருந்து பாஜக பிரதிநிதி வானதி சீனிவாசன் வெளிநடப்புச் செய்தார்.

வெளிநடப்புச் செய்ததற்கான காரணம் குறித்து வானதி சீனிவாசன் கூறியதாவது:

"பாஜக சார்பில் எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்து, இந்தத் தீர்மானித்தின் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதையும் தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியே வந்துள்ளோம்.

மாநில அரசு நிதியிலிருந்து மாநில அரசுகளால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகள், அந்த மாநில மாணவர்கள் எந்த முறையில் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறித்துவிட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்து உருவாக்க வேண்டும் என்றால், அதற்கு வடகிழக்கு மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் உருவாக்கப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு 60 சதவிகிதம் நிதியுதவி செய்கிறது. 40 சதவிகித நிதியுதவியைத்தான் மாநில அரசு செய்கிறது. இதை நான் கூட்டத்தில் தெரிவித்தேன்.

அதேபோல, ஒன்றிய அரசினால், மாநில அரசு மீது திணிக்கப்பட்ட நீட் தேர்வானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பாஜக செயல் திட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டதல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இருந்தபோதே 2013-இல் இருந்து தொடங்கப்பட்ட இதன் முன்முயற்சி அனைத்தும் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசால்தான் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

சமூக நீதிக்கு எதிரானதாக நீட் தேர்வைக் குறிப்பிட்டுள்ளார்கள். இடஒதுக்கீடு 69 சதவிகிதம் தமிழ்நாட்டில் இருந்துகொண்டிருக்கிறது. அதற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இது சமூக நீதிக்கு எதிரானதல்ல.

கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிரானது எனக் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். 2007 முதல் நீட்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு வருடமும் 1 சதவிகிதத்துக்கும் குறைவான அரசுப் பள்ளி மாணவர்களே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்.

ஆரம்பக் கட்டத்தில் நீட் தேர்வில் பிரச்னைகள் இருந்ததை நாங்கள் மறுக்கவில்லை.

நீட் தேர்வு வருவதற்கு முன்பாக எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றிய வெள்ளை அறிக்கையைக் கேட்டிருக்கிறோம். அதை முதல்வர் தர வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.