ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி திங்கள் கிழமை அறிவித்தார்.
மதுரையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவுள்ளதாக கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் பங்கேற்க நாளை முதல் இணையம் வாயிலாக பதிவு செய்யலாம்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்போர் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்.
மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளில் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும்.
ஒரு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றொரு போட்டியில் பங்கேற்க அனுமதி கிடையாது. அதேபோன்று ஒரு போட்டியில் பங்கேற்கும் மாடு மற்றொரு போட்டியில் பங்கேற்க அனுமதியில்லை.
ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி. உள்ளூர் அடையாள அட்டை இல்லாதவர்கள் சோதனைச் சாவடிகளிலேயே திருப்பி அனுப்பப்படுவர் என்று கூறினார்.