தமிழ்நாட்டில் 64% பேருக்கு முழுமையாக தடுப்பூசி: முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 64% பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 64% பேருக்கு முழுமையாக தடுப்பூசி: முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 64% பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (13-1-2022) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றியபோது, கரோனா தொற்றுநோயின் ஓமைக்ரான் அலையை நிர்வகிக்க தமிழ்நாடு முழுமையாக தயார் நிலையில் உள்ளதாகவும், தமது அரசு பொறுப்பேற்ற பிறகு, தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்துள்ளதாகவும், அந்த வகையில் இன்று வரை, தகுதியுள்ளவர்களில் 64% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 15 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களில் 74 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாகவும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்திட, மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தேவையான அனைத்து நகரங்களிலும் கரோனா பராமரிப்பு மையங்களும் தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் தேசிய அளவில் வரையறுக்கப்பட்ட சோதனை விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுவதாகவும், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையை மட்டுமே பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்ட அவர், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் உற்பத்தி திறன், ஆக்சிஜன் சேமிப்பு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளையும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளைக் கண்டிப்பாக அமல்படுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் தான் அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், நிலைமையைச் சமாளிக்க அனைத்துத் அரசு இயந்திரமும் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, இந்த கரோனா அலையை நிர்வகிப்பதில் ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழ்நாடு துணை நிற்கும் என்று உறுதியளிப்பதாக  முதல்வர் குறிப்பிட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய மருத்துவ மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம்
மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச்
செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புப் பணி அலுவலர் முனைவர்.பி. செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com