தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர், கடந்த நவம்பர் மாதம் சேந்தமங்கலத்தில் உள்ள மளிகை கடை உரிமையாளர் ஒருவர் வீட்டில் 20 பவுன் நகையை திருடியதாக காவலர்களால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களில் சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஹம்சலா ஆகியோரும் அடங்குவர். கடந்த 8ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் 10-ஆம் தேதி நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கடந்த 13-ஆம் தேதி பிரபாகரனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.