நாமக்கல்: விசாரணைக்கு அழைத்து வந்த மாற்றுத்திறனாளி பலி; 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் காவலர்கள் தாக்கியதில் மாற்றுத்திறனாளி  இறந்ததாக கூறப்படும் வழக்கில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல்: விசாரணைக்கு அழைத்து வந்த மாற்றுத்திறனாளி பலி; 3 காவலர்கள் பணியிடை நீக்கம்
நாமக்கல்: விசாரணைக்கு அழைத்து வந்த மாற்றுத்திறனாளி பலி; 3 காவலர்கள் பணியிடை நீக்கம்
Published on
Updated on
1 min read


நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் காவலர்கள் தாக்கியதில் மாற்றுத்திறனாளி  இறந்ததாக கூறப்படும் வழக்கில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர், கடந்த நவம்பர் மாதம் சேந்தமங்கலத்தில் உள்ள மளிகை கடை உரிமையாளர் ஒருவர் வீட்டில் 20 பவுன் நகையை திருடியதாக காவலர்களால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களில் சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஹம்சலா ஆகியோரும் அடங்குவர். கடந்த 8ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் 10-ஆம் தேதி நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கடந்த 13-ஆம் தேதி பிரபாகரனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பிரபாகரன் மனைவி ஹம்சலா தற்போது சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சேலம் சரக டிஐஜி (பொறுப்பு) நஜ்மல்ஹோடா இவ்வழக்கு தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். 

அதனடிப்படையில் சேலம் அரசு மருத்துவமனை காவலர்கள் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். சேந்தமங்கலம் காவலர்கள் மாற்றுத் திறனாளியான பிரபாகரனை 8-ஆம் தேதி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து 10-ஆம் தேதி கைது செய்தாகக் காட்டியதும் தெரியவந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 11-ஆம் தேதி நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டதால் அவர் இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற குற்றவியல் எண்-1 நீதிபதி கலைவாணி இவ்வழக்கில் நேரடியாக விசாரணை செய்தார். 
இந்த நிலையில் சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சந்திரன், பூங்கொடி மற்றும்  குழந்தைவேலு என்ற கான்ஸ்டபிள் ஆகியோரை சேலம் சரக டிஐஜி ஞாயிற்றுக் கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து உயிரிழந்த பிரபாகரனின் சடலத்தை அவரது உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com