தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் குறைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமல்படுத்தப்பட்டுள்ளது.
டெல்டா, ஒமைக்ரான் பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் தமிழகத்தில் தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளது.
கடந்த 15-ஆம் தேதி 30 சதவிகிதமாக இருந்த பாதிப்பு தற்போது 20 சதவிகிதமாக குறைந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது. டிசம்பரில் 100 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது 1000 பேரில் ஒருத்தர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர இயலாது. பல்வேறு இணை நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.