‘கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் மூலமே தேர்வுகள்’: அமைச்சர் பொன்முடி

கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி திறக்கப்பட்டாலும் ஆன்லைன் மூலமே தேர்வுகள் நடைபெறும்
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளரிடம் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளரிடம் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி

விழுப்புரம்: பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கினாலும் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் அதிகரித்ததால் தமிழகத்தில் இரவுநேர பொதுமுடக்கம், ஞாயிறு பொது முடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.

 மேலும் பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. கல்லூரிகளுக்கும் தேர்வையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில்  பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால், கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறுமா? அல்லது நேரடியாக நடைபெறுமா? என்ற குழப்பம் இருந்தது வருகிறது.

இந்நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்படி நடைபெறும் என்பது குறித்து உயர் கல்வித்‌ துறை க.அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளரிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்-லைன் மூலமாக தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அட்டவணைகளும் பல்கலைக்கழகங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, வரும்  பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றாலும், தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போலவே, ஆன்-லைன் மூலமாக நடைபெறும்.

இதில், மாணவர்கள், பெற்றோர்கள் யாரும் குழப்பமடையத் தேவையில்லை. கல்லூரிகளில் 1, 3, 5 ஆகிய செமஸ்டர் தேர்வுகள் ஆன்- லைனில் நடைபெற்றும்.

ஆன்-லைன் தேர்வு நடைபெறும் நாட்களைத் தவிர்த்து, செய்முறை தேர்வு உள்ளிட்ட வகுப்புகள் போன்றவை நேரடியாகவே நடைபெறும். இந்த ஆன்-லைன் தேர்வுகளும் முறையாக நடத்தப்படும். அதனைத்தொடர்ந்து, வகுப்புகள் எப்போதும்போல நேரடியாகவே நடைபெறும்.

தமிழகத்தில் உள்ள மிகவும் பழமையான இடிந்து விழும் நிலையிலான பள்ளி உள்ளிட்ட அனைத்து கட்டடங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
 ஏற்கனவே, பள்ளிக் கட்டடங்கள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கல்லூரிக் கட்டடங்களும் கூட ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், கல்லூரிகளில் ஏதாவது இடிந்து விழும் நிலையிலான பழையக் கட்டடங்கள் இருந்தால், அதனை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தைப் பொருத்தவரை இருமொழிக் கொள்கைதான் இருந்து வருகிறது. மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் வாய்ப்பு கிடையாது. இதனை,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை கூறி வருபவர்கள், வட இந்தியாவில் தென்னிந்திய மொழிகள் இதுவரை பயிற்றுவிக்கப்பட்டு உள்ளதா, குறைந்தபட்சம் விருப்பப் பாடமாகவாவது சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கூற வேண்டும்  என உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com