அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தகார எழுந்த புகாரில் அவருக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது அவருடைய பதவி தவறாகப் பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக தெரிய வந்தது.
இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு தொடர்பாக, மன்னார்குடி, கோவை, திருச்சி, தஞ்சாவூர், சென்னை, திருவாரூர் ஆகிய இடங்களில் அவருக்கு சொந்த 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கட்டணம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அஇஅதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.
அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பழனிசாமி பதிவிட்டுள்ளார்.