அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் அதிமுக தொண்டர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் மோதல் வெடித்தது.
இதையும் படிக்க.. அதிமுக அலுவலகத்தில் நுழைந்த சமூக விரோதிகள்: எடப்பாடி பழனிசாமி
இதில் காயமடைந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலைத் தொடர்ந்த அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தி விட்டுத் திரும்பிய எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனையில் உள்ள தொண்டர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
நினைவிடங்களில் அஞ்சலி
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க.. அதிமுக தொண்டர்கள் எனது தலைமையையே விரும்புகின்றனர்: சசிகலா
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலரஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி, அண்ணா நினைவிடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்கும் தீர்மானம், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கட்சியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கும் சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினர்.
எடப்பாடி பழனிசாமியுடன், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், கே.பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், பொன்னையன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பா வளர்மதி உள்ளிட்டோரும் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர்.