சென்னை: கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உடல் நலம் குறித்துப் பேசினார்.
இது குறித்து தமிழக அரசு கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் தங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் விசாரித்த பிரதமருக்கு நன்றி கூறிய முதல்வர் ஸ்டாலின், அவரிடம் தான் நன்கு குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் வரும் ஜூலை 28-ஆம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வருக்கு கரோனா
இரண்டு நாள்களுக்கு முன்பு, முதல்வருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிலிருந்தே அரசுப் பணிகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில், பரிசோதனைகள் மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கரோனா சார்ந்த அறிகுறிகள், பரிசோதனைகளுக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.