
பள்ளியில் நடந்தது என்ன? அறிக்கை தர பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாா் பள்ளியில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக, அவரது உறவினா்கள், பொதுமக்கள் கடந்த 5 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
படிக்க | பிளஸ் 2 மாணவி மரணம்: பேருந்துகளுக்கு தீ வைப்பு; 20 காவலர்கள் படுகாயம்
இதனிடையே இன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதில், போராட்டக்காரர்கள் கற்களை வீசி பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளி வளாகத்தில் இருந்த பேருந்துகளை டிராக்டர் கொண்டு இடித்து நொறுக்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சூழ்ந்து பள்ளிப் பேருந்தை கவிழ்த்தனர். மேலும் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல் துறை வாகனங்களையும் தீயிட்டு எரித்தனர்.
படிக்க | மாணவி மரணம்: 'குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்'
இந்நிலையில், பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது ஆடைகளிலும் ரத்த கரைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்ட பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அலுவலகர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
படிக்க | 'காவலர்களைத் தாக்கியதற்கு கண்டனம்: போராட்டத்தைக் கைவிட வேண்டுகோள்'