பொறியியல் படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்தாண்டு 50 சதவிகித இடங்கள் காலியாக கிடக்கும் சூழல் எழுந்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றின் பரவல் காரணமாக கடந்தாண்டு 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், அதிகளவிலான மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு விருப்பம் காட்டியதால், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்தாண்டு 59 சதவீத இடங்கள் நிரம்பின.
ஆனால், இந்தாண்டிற்கான சூழல் முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதளத்தில் இந்தாண்டிற்கான விண்ணப்பம் தொடங்கி ஒரு மாதமாகியும், இதுவரை 1.79 லட்சம் மாணவர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதிலும், 1.28 லட்சம் பேர் மட்டுமே தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
கடந்தாண்டு விண்ணப்பம் வெளியிடப்பட்டு 9 நாள்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பொறியியல் படிப்புகளில் கணினி துறையை தவிர பிற துறைகளுக்கான வேலை வாய்ப்புகள் குறைவாக காணப்படுவதால் மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்வதில் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில், தமிழக பொறியியல் கல்லூரிகளில் இந்தாண்டு 50 சதவீத இடங்கள் காலியாகக் கிடக்கும் எனத் தெரிகின்றது.