தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயரவுள்ளன. 42 சதவிகித வீடு மற்றும் குடிசைக்கான மொத்த மின் கட்டணத்தில் மாற்றமில்லை.
பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மின் கட்டணம் குறைவாகவே உள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு தமிழக மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது.
100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்
ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு திட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. 100 யூனிட் மின்சாரம் வேண்டாம் என நுகர்வோர் எழுதிக்கொடுக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணத்தை உயர்த்த நெருக்கடி
தமிழ்நாட்டில் ஒரு கோடி மின் இணைப்புகளுக்கு எந்தவித கட்டண உயர்வும் இல்லை. திமுக வாக்குறுதியின்படி மின்சாரத்துக்கான நிலைக்கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு 28 முறை கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது.
மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மானியங்களும் மின் திட்டங்களும் ரத்து செய்யப்படும். உரிய நிதியும் வழங்கப்படாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
குறைந்த அழுத்த மின் இணைப்புப் பெற்ற 3,37,000 தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதேபோன்று உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் 11,000 தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன.
தமிழகத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 3.53 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். குஜராத் போன்ற பிற மாநிலங்களை ஒப்பிட்டால், தமிழகத்தில் மின் கட்டணம் குறைவாகவே உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.