கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில், பிளஸ்2 மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர் உள்பட 5 பேருக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையும் படிக்க.. குடியரசுத் தலைவராக தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு??
மாணவியின் மரணம் தொடர்பாக அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன், இரண்டு ஆசிரியைகள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர் பள்ளிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பள்ளி மற்றும் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சூறையாடினர்.
போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது, காவலர்கள் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் பாண்டியன் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.
மாணவியின் மரணம் தொடர்பாக அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன் ஞாயிறன்று கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று ஆசிரியைகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பள்ளியில் நிகழ்ந்த வன்முறை நிலவரம் குறித்த அமைச்சர் எ.வ. வேலு திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.