அதிமுக அலுவலக பத்திரங்களைக் காணவில்லை: ஓபிஎஸ் மீது சி.வி.சண்முகம் புகார்

அதிமுக அலுவலகத்தின் பத்திரங்களைக் காணவில்லை என ஓ.பன்னீர்செல்வம் மீது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
சி.வி.சண்முகம்.
சி.வி.சண்முகம்.
Published on
Updated on
1 min read

அதிமுக அலுவலகத்தின் பத்திரங்களைக் காணவில்லை என ஓ.பன்னீர்செல்வம் மீது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றபோது, ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகம் முன் கூடியிருந்த ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. இந்த மோதலில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

இதனை அகற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான விசாரணையில் , அலுவலகத்தை திறக்க அனுமதித்து,  தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டாா்.

அதன்படி, அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு திறக்கப்பட்டது. அப்போது தலைமை அலுவலகத்தில் சேதமடைந்த இடங்களை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட இபிஎஸ் தரப்பினர் பார்வையிட்டு  அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருள்களைக் காணவில்லை என சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி இருந்தார். 

இதையடுத்து ஓபிஎஸ் மீது சி.வி.சண்முகம் சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அதிமுக அலுவலகத்தில் முக்கியப் பத்திரங்களை காணவில்லை. அண்ணா சாலையில் உள்ள சபையர் தியேட்டர் இடத்தின் அசல் பத்திரம் காணவில்லை. அதுபோல அதிமுகவுக்குச் சொந்தமான மொத்தம் 37 மோட்டார் வாகனங்களின் அசல் பதிவுச் சான்றிதழ்களையும் காணவில்லை. 

தலைமைக் கழகத்தை உடைத்து உள்ளே சென்று அதற்கு சீல் வைக்க காரணமாக இருந்தவர் ஓபிஎஸ். அவர், வாகனத்தில் ஆவணங்களை எடுத்துச் சென்றது அனைவருக்குமே தெரியும். 

இந்தியாவில் எந்த ஒரு கட்சியிலும் இவ்வளவு மோசமான சம்பவம் இடம்பெறவில்லை. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காவல்துறை பாதுகாப்பு கோரி மனு அளித்தும் காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை. 

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதை நகரமாக தமிழகம் மாறியுள்ளது. 

ஆவணங்களை எடுத்துச் சென்ற ஓபிஎஸ் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 

முன்னதாக, மோதல் நடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் எடுத்துச் சென்றதாக புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com