முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, தேனி மாவட்ட முதல் போக பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் புதன்கிழமை (ஜூன் 1) தண்ணீரை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள நன்செய் நிலங்களுக்கு, ஆண்டுதோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் மாதம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால் முதல் போகத்திற்கு ஜூன்மாதம் திறக்கவேண்டிய தண்ணீா் தாமதமாகவே திறக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மழை பெய்து அணையின் நீா்மட்டம் 130.90 அடிவரை உயா்ந்ததால், ஜூன் மாதம் முதல்தேதியில் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.
இந்த ஆண்டும் அணையின் நீா்மட்டம் மே மாதத்தில், 130 அடிக்கு குறையாமல் இருந்ததால், ஜூன் 1 இல் அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதன்கிழமை (ஜூன் 1) முதல் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக பாசனத்திற்காக தண்ணீா் திறக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு 2 போக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கு 14, 707 ஏக்கா் பரப்பளவு நன்செய் நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு, 200 கன அடி வீதம், தேனி மாவட்ட குடிநீா் தேவைக்காக வினாடிக்கு, 100 கன அடி வீதம், என மொத்தம் வினாடிக்கு 300 கன அடி வீதம் புதன்கிழமை (ஜூன் 1) முதல், 120 நாள்களுக்கு நீா் இருப்பைப் பொருத்து, தேவைக்கேற்ப, தண்ணீா் திறந்து விடப்படும் என்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டார்.
இந்நிலையில், தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் மதகு பகுதியில், புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, தலைமதகிலிருந்து மின்னாக்கி மூலம் தண்ணீரைத் திறந்து வைத்தார்.
இதில், பாசனத்திற்கு 200 கன அடி, குடிநீருக்கு 100 கன அடியும் என வினாடிக்கு மொத்தம் 300 கன அடி தண்ணீர் சென்றது.
பயன்பெறும் நிலங்கள்: இன்று திறக்கப்பட்ட தண்ணீரால் தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் என மொத்தம், 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நன்செய் நிலங்களில் முதல் போக சாகுபடி நடைபெறும். 01.06.2022 முதல் 120 நாள்களுக்கு நீர் இருப்பைப் பொறுத்து, தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிடப்டுகிறது.
நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கம்பம் என்.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி ஆ.மகாராஜன், பெரியகுளம் கே.எஸ்.சரவணக்குமாா், கூடலூர் நகர் மன்றத் தலைவர் பத்மாவதி லோகந்துரை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அணை நிலவரம்:
அணையின் நீா்மட்டம், 132.30 அடியாகவும், (மொத்த அடி 142 ), நீா் இருப்பு , 5,235 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு, 235 கன அடியாகவும் கன அடியாகவும் இருந்தது.
இதையும் படிக்க | வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைப்பு!