கெங்கவல்லி அருகே திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண் கல்லைத் தூக்கிப் போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கூடமலையைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு நந்தினி (22), ரோஜா (20) ஆகிய மகள்கள் உள்ளனர். ரோஜா, ஆத்தூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு பயின்று வருகிறார். இவரை ஆத்தூர் தாண்டவராயபுரத்தைச் சேர்ந்த ராமர் மகனும், சென்னையிலுள்ள கல்லூரி மாணவருமான சாமிதுரை (22), ரோஜாவை 3 ஆண்டாக ஒருதலைக் காதலாக காதலித்து வந்துள்ளார்.
இவர், கல்லூரி செல்லும் வழியில் ரோஜாவிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளாராம். பல முறை ரோஜாவிடம், தன்னை காதலிக்கும் படியும், திருமணம் செய்யும்படியும் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், ரோஜா மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், ரோஜாவின் அக்கா நந்தினியின் திருமண அழைப்பிதழ்கள் கொடுப்பதற்காக குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை வெளியூர் சென்று விட்டனர். நந்தினியும், ரோஜாவும் தனியே தோட்டத்து வீட்டில் இருந்தனர்.
அப்போது, அங்கு சாமிதுரை, ரோஜாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி தகராறு செய்யவே, இருவருக்கும் தகராறு முற்றியுள்ளது. அப்போது, சாமிதுரை அருகே இருந்த மண்ணெண்னையை எடுத்து நந்தினி, ரோஜா மீது ஊற்றியுள்ளார். அதில், நந்தினி தப்பித்து ஓடி விட்டார்.
ஆனால், ரோஜா அருகில் இருந்த சேற்றில் விழுந்ததால், அவர் மீது மண்ணென்னையை ஊற்றி, தீ வைக்க முடியாத ஆத்திரத்தில், அருகில் கிடந்த பெரிய கல்லைத் தூக்கி, ரோஜா மீது சாமிதுரை போட்டுவிட்டு தப்பியோடி விட்டார்.
இதில், ரோஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கெங்கவல்லி போலீசார், ரோஜாவின் உடலைக் கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தலைமறைவாகி விட்ட சாமிதுரையை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.