சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைக்கப்பட்டுள்ள 235வது பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 8) திறந்து வைத்தார்.
2011ஆம் ஆண்டு கட்டப்பட்டு திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த சமத்துவபுரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து வீடுகளின் சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேவுள்ள கோட்டை வேங்கைபட்டியில் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 100 வீடுகள், அங்கன்வாடி மையம், நியாயவிலைக்கடை, பூங்கா உள்ளிட்டவை என சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் சகல வசதியுடன் கூடிய சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே பணிகள் நிறைவு பெற்ற நிலையில், ஆட்சி மாற்றத்தின் காரணமாக பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், சமத்துவபுரம் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று திறந்து வைத்தார். சமத்துவபுரத்தை திறந்துவைத்து முகப்பில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து 100 பயனாளிகளுக்கு சமத்துவரபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த வீட்டு சாவிகளை வழங்கினார்.
சமத்துவபுரத்தின் முகப்பில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் தந்தை பெரியாரின் மார்பளவு திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.