புதுச்சேரியில் நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படம் திரையிடப்பட்டிருந்த திரையரங்கின் திரை திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
தீ மளமளவென பரவியதால், அரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் உள்ள திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது.
படத்தின் இறுதிக் காட்சி ஓடிக் கொண்டிருந்தபோது தியேட்டரில் உள்ள திரையின் ஒரு பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென பரவியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் படம் பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்கள அனைவரும் அலறி அடித்துக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியேறினர்.
பின்னர் இதுகுறித்து காலாப்பட்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் தியேட்டர் திரையின் பெரும் பகுதி எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.