தஞ்சாவூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் அரிவாளை காட்டி அடுத்தடுத்து 6 கடைகளில் பணம் பறித்ததுடன், பணம் தர மறுத்த மளிகை கடையின் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டிய போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் கரந்தை பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடமாகும். மேலும், தஞ்சாவூர் - கும்பகோணம், தஞ்சாவூர் - சென்னை, தஞ்சாவூர் - திருவையாறு உள்ளிட்ட ஊர்களின் பிரதான வழித்தடமாகவும் உள்ளது. எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில், வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள மருந்து கடை, மளிகை கடை, உள்ளிட்ட ஆறு கடைகளில் அரிவாளை காட்டி பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். மேலும், பணம் தர மறுத்த கடைகளில் அரிவாளை காட்டி மிரட்டி கல்லாவில் இருந்து பணத்தையும் எடுத்து சென்றுள்ளனர்.
அதே பகுதியில் உள்ள செந்தில்வேல் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில், அந்த இளைஞர்கள் பணம் கேட்டபோது கடை உரிமையாளர் பணம் தர மறுத்ததால், அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கிழக்கு மற்றும் மேற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.